திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைதியான முறையில் இன்று (06) நடைபெற்று வருகின்றது.
இந்த மாவட்டத்தில், 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக காலை 7.00 முதல் வாக்களிப்பு ஆரம்பமானது.
இந்த மாவட்டத்தில், காலை 9.15 மணிக்கு 16.1 வீதமும், காலை 10 மணிக்கு 22.2 வீதமும் வாக்களிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் அத்தியேட்சகர் W. G. M. ஹேமந்தகுமார தெரிவித்தார்.
ஒரு மாநகர சபை, ஒரு நகர சபை மற்றும் 11 பிரதேச சபைகள் உட்பட மொத்தம் 13 உள்ளூராட்சி சபைகளுக்காக 221 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களும்,129 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் 3820 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1,700 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட, திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாநகர சபையில் 38338 பேரும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் 35617 பேரும், குச்சவெளி பிரதேச சபையில் 29540 பேரும், தம்பலாகமம் பிரதேச சபையில் 24761 பேரும், சேருவில பிரதேச சபையில் 11859 பேரும், வெருகல் பிரதேச சபையில் 9840 பேரும், கந்தளாய் பிரதேச சபையில் 39124 பேரும், மொரவெவ பிரதேச சபையில் 6692 பேரும், பதவிசிரிபுர பிரதேச சபையில் 9740 பேரும், மூதூர் பிரதேச சபையில் 50671 பேரும், கிண்ணியா நகர சபையில் 29131 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் 27168 பேரும், கோமரன்கடவவெல பிரதேச சபையில் 6692 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கிண்ணியா ஜொஹரா உம்மா வித்யாலயத்தில், தனது வாக்கை பதிவு செய்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், கிண்ணியா ரீ. பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில், தனது வாக்கை பதிவு செய்தார்.